காவலர் நினைவுத்தூண் அமைக்க உதவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

காவலர் வீர வணக்க நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
பெங்களூரு,
நாடு முழுவதும் ஆண்டுதோறும் உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பின் போது பலியான போலீசாரின் தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் காவலர் வீர வணக்க நாள் அக்டோபர் 21-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அதுபோல் நேற்றும் காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் டவுன் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாளையொட்டி 27 அடி உயர நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூண் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. நேற்று அங்கு சாம்ராஜ்நகர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி பிரபாவதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அந்த நினைவுத்தூணை அர்ப்பணித்தார்.
இந்த நினைவுத்தூணை கட்ட இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நிதி உதவி அளித்துள்ளார். இவர் சிலோன் பானங்கள் கேன் நிறுவனத்தை சாம்ராஜ்நகரில் நடத்தி வருகிறார். இதனால் அவர் காவலர் நினைவுச்சின்னம் அமைக்க நிதி உதவி வழங்கியதாக கூறப்படுகிறது.






