

புதுடெல்லி,
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது ராணுவ முன்னாள் தலைமை தளபதி எம்.எம்.நரவனே எழுதி வெளிவராத புத்தகத்தின் கட்டுரையை மேற்கோள் காட்டி மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியதால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் சபை தள்ளி வைக்கப்பட்டது.
இன்று ராகுல் காந்தி பேசும் போது, 'பிரதமர் மோடி அவைக்கு வரும்போது அவரிடம் நரவணே எழுதிய புத்தகத்தைக் கொடுப்பேன். அவர் புத்தகத்தில் படித்தாவது தெரிந்துகொள்ளட்டும்' என்று கூறியிருந்தார். .ஆனால், இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மக்களவையில் பேசுவதாக கூறப்பட்டு இருந்தது.
ஆனால், மோடி இன்று அவைக்கு வரவில்லை. தொடர் அமளியால் மக்களவை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ”பிரதமர் மோடி பயந்துவிட்டார், அதனால்தான் அவர் இன்று அவைக்கு வரவில்லை. மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவும் ஒரு புல்லட் ரயில்போல ஓடிவிட்டனர் " என்று தெரிவித்தார்.