மும்பையில் கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மும்பையின் தாழ்வான தெற்கு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கனமழை காரணமாக மும்பையில் செம்பூர் மற்றும் விக்ரோலி ஆகிய இடங்களில் வீட்டின் சுற்று சுவர் சரிந்து விழுந்ததில் 15 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீயணைப்புத் துறை, தேசியபேரிடர் மீட்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயங்களுடன் இருந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், மும்பையின் செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதிகளில் பலத்த மழையைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்திகளால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அங்கு அனைவருக்கும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் கிடைக்க விரும்புகிறேன் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com