

டெல்லியில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது; உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 16 சதவீதமாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியா உலக வளர்ச்சியின் இன்ஜினாக மாறும். முன்பு அனைவருக்கும் ஒரே மாதிரியான கொள்கை என்ற அடிப்படையில் உலகம் இயங்கி வந்தது.
இதில், ஒவ்வொரு நாடுகளும் பங்களிப்பாளர்களாக கருதப்பட்டன. ஆனால், தற்போது ஒவ்வொரு நாடும் மீள்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன. உலக நாடுகள் இன்று எதை பேசுபொருளாக்கியுள்ளதோ, அதை இந்தியா 2015-ம் ஆண்டே தனது கொள்கையாக மாற்றியது. நிதி ஆயோக் உருவாக்கப்பட்ட போதே, பிற நாடுகளின் வளர்ச்சி மாதிரியையும் இந்தியாவில் இறக்குமதி செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறோம்.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா இன்று தன்னம்பிக்கை மிக்க நாடாக உள்ளது. அதனால்தான் உலகம் நம்மை நம்புகிறது” இவ்வாறு அவர் கூறினார்.