

பரேலி,
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பவுபோராவைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் (வயது 33). இவர் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்காக கைலாஷ்புரத்தில் உள்ள கிர்ஜா சங்கர் காலனியில் தனது மனைவி ஜோதியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஜோதி அங்குள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.
ஜிதேந்திர குமார் ஜோதியை 9 வருடமாக காதலித்து வந்தார். பள்ளியில் படிக்கும்போது இருந்தே அவர்களது காதல் தொடர்ந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி, ஜிதேந்திர குமார் வீட்டில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.இதுபற்றி ஜோதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து ஜிதேந்திர குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஜிதேந்திர குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் அஜய் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், ஜிதேந்திர குமார் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் ஜோதியிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் முன்னுக்குப் பிற முரணான தகவல்களை கூறினார். இதையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. ஜிதேந்திர குமாரை ஜோதி மற்றும் ஜோதியின் பெற்றோர், சகோதரர் ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதும், பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியதும் தெரிய வந்தது.
ஜிதேந்திர குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டவர். இதனால் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி சூதாட்டத்தில் போனதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.ஜோதியின் வங்கிக் கணக்கில் இருந்து ஜிதேந்திர குமார் ரூ.20,000 எடுத்து அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஜோதி தனது தந்தை காளிசரண், தாய் சமேலி மற்றும் சகோதரர் தீபக் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து ஜிதேந்திர குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், கணவன்-மனைவி இருவரும் சமாதானம் ஆகவில்லை.ஒரு கட்டத்தில், ஜிதேந்திர குமார் ஜோதியின் பெற்றோர் உடன் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் சேர்ந்து ஜிதேந்திர குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக உடலை தூக்கில் கட்டி தொங்கவிட்டு ஜிதேந்திர குமார் தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளிவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ஜோதி மற்றும் அவரது பெற்றோர் காளிசரண்-சமேலி ஆகியோரை கைது செய்தனர். சகோதரர் தீபக் மீது போலீசார் தேடல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.