புதுடெல்லி,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உட்பட 260 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட விசாரணையில், விமானத்தின் இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் தடைபட்டதே விபத்துக்குக் காரணமாக இருந்ததாக கடந்த ஜூலை மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மேற்படி விபத்து குறித்த விசாரணை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை விமான விபத்து புலனாய்வு ஆணையம் மறுத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று தெரிவித்துள்ளது. விமான விபத்து தொடர்பான விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.