

புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை இன்று காலை வழக்கம்போல் கூடியது. இதில், கேள்வி நேரத்தின்போது அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்கள் கோஷங்களை எழுப்பியும், பதாகைகளையும் காட்டியும் எதிர்ப்பை பதிவு செய்தனர். வர்த்தக ஒப்பந்தம் திரும்ப பெறப்பட வேண்டும் என சிலர் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
ஆனால், அவைக்குள் பதாகைகளை வைப்பது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என அவை தலைவரான கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி கூறியதுடன், அவற்றை கீழே போடும்படி கூறினார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.
தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால், அவை நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்வி மற்றும் அதன் துணை கேள்விகள் எடுத்து கொள்ளப்பட்டன. அது ஏழு நிமிடங்கள் வரை நீடித்தது.
இதன்பின்னர் மீண்டும் அவை கூடியபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைத்து அவை தலைவர் தென்னேட்டி உத்தரவிட்டார்.