

காரைக்கால்,
புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொதுக்கூட்டம் ஒன்றில் இன்று கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தினமும் பொய் சொல்லும் ஒரு புதிய மரபை தொடங்கி இருக்கிறார்.
அதுவும் பொய் சொல்வது, உரக்க பொய் சொல்வது, திரும்ப திரும்ப சொல்வது என்பது ராகுல் காந்தியின் கொள்கையாக உள்ளது. ஆனால், உங்கள் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு விட்டனர் என்று பேசியுள்ளார்.
இதேபோன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை பற்றியும் அமித்ஷா பேசினார். அவர் கூறும்போது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றில் உள்ள பிரிவுகள், வெளிப்படையாக கூறினால் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் கவனத்துடன் படித்து, ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
இந்திய விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு, பிரதமர் மோடி 100 சதவீத பாதுகாப்பை அதில் உறுதி செய்துள்ளார் என்றும் அமித்ஷா பேசினார். விவசாயிகளின் நலன்கள், மறைந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தான் விற்கப்பட்டன என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார்.
தொடர்ந்து அவர், வருகிற 2029-ம் ஆண்டிலும், பிரதமர் மோடி தலைமையின் கீழ், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்றும் நம்பிக்கையை வெளியிட்டார்.