வடகிழக்கு மாநிலங்களுக்கு மிக உயரிய மதிப்பளித்தவர் பிரதமர் மோடி:  மத்திய மந்திரி சோனோவால்

வடகிழக்கு மாநிலங்களுக்கு மிக உயரிய மதிப்பளித்தவர் பிரதமர் மோடி: மத்திய மந்திரி சோனோவால்

வடகிழக்கு மாநிலங்கள், அதன் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு மிக உயரிய மதிப்பளித்தவர் பிரதமர் மோடி என மத்திய மந்திரி சோனோவால் குறிப்பிட்டார்.
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை 2 கட்டங்களாக கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இதன்பின்னர், 2-வது நாளில், மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் இந்த விவாதம் பிப்ரவரி 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நடைபெறும் என்றும் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக மக்களவையின் அலுவல் ஆலோசனை குழு கூடி முடிவு செய்தது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி 4-ந்தேதி மக்களவையில் பதில் உரை அளிப்பார்.

இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி துறைக்கான மந்திரி சர்பானாந்தா சோனோவால் பேசும்போது, வடகிழக்கு மாநிலங்கள், அதன் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு மிக உயரிய மதிப்பளித்தவர் பிரதமர் மோடி என குறிப்பிட்டார்.

அதனாலேயே, அவரை எங்களுள் ஒருவர் என நாங்கள் கருதுகிறோம் என்றார். வடகிழக்கு மற்றும் அசாமில் வந்த முதல் பழங்குடி நபர் மற்றும் எம்.பி. என்ற வகையில் நான் மிகுந்த பெருமையுடன் உணர்கிறேன். ஜனாதிபதி உரையை இந்தியாவின் வருங்கால வழிகாட்டுதலாக மட்டும் கொள்ளாமல், காங்கிரஸ் சகாப்தத்தின் தோல்விகளுக்கான தீர்ப்பாகவும் எடுத்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாட்டின் வளர்ச்சிக்கான உருமாற்றத்தின் அறிவிப்பாகவும் எடுத்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

X

Dailythanthi
www.dailythanthi.com