

திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா (பொங்கல் விழா) நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா வருகிற 23-ந்தேதி தொடங்கும். இந்த திருவிழா மார்ச் 4-ந்தேதி வரை நடைபெறும்.
இதில், விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு மார்ச் 3-ல் நடைபெற உள்ளது. அப்போது, பெண்கள் மண் பானையில் பொங்கலிட்டு பகவதியம்மனுக்கு படைப்பார்கள். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பங்கு பெறுவார்கள்.
இந்த ஆண்டு, பொங்கல் வழிபாடுக்கான விழாவில் பங்கேற்க 40 லட்சம் பெண்கள் வர வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பல்வேறு ஊர்களில் இருந்து திருவனந்தபுரம் நகருக்கு சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.