

கொல்கத்தா,
மியான்மர் நாட்டில் இரவில் 2 முறை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் மற்றும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரிலும் உணரப்பட்டது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மியான்மரில் இரவு 9.04 மற்றும் 9.21 என அரை மணிநேர இடைவெளியில் முறையே ரிக்டரில் 6 மற்றும் 5.3 அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன்படி கொல்கத்தாவிலும் நிலநடுக்க பாதிப்புகள் தெரிந்துள்ளன. இதுபற்றி உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, நான் கடையில் இருந்தேன். அப்போது, லேசாக நிலஅதிர்வு ஏற்பட்டது தெரிந்தது.
அது நிலநடுக்கம் என பின்னரே தெரிய வந்தது என்றார். மற்றொரு நபரான மிருத்யுஞ்சய் தாஸ் கூறும்போது, நிலஅதிர்வுகளை நாங்கள் உணர்ந்தோம். விளக்குகளும், நாற்காலிகளும் அவற்றின் இடத்தில் இருந்து நகர்ந்தன. இதன்பின்பே அது நிலநடுக்கம் என எங்களுக்கு தெரிய வந்தது என கூறினார்.