

புதுடெல்லி,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் பிரசார பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார். அந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 11-ந்தேதி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். புதுச்சேரி லாஸ் பேட்டை விமான நிலைய மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொள்ள உள்ளார்.
மேலும், புதிதாக கட்சி தொடங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் மார்ட்டினும் கூட்டத்தில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.