

மும்பை,
நாட்டின் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய நகராக மராட்டியத்தின் மும்பை இருக்கிறது. இந்நிலையில், மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மும்பை மாநகராட்சியின் துணை மேயராக சஞ்சய் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டேவும், துணை மேயராக சஞ்சய் காந்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
அவர்கள் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். இதனால் மக்கள் பயனடைவார்கள். மகாயுதி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும். நாங்கள் ஒன்றுபட்டு உழைப்போம். மும்பை மாநகராட்சியை வழிநடத்துவோம். மும்பையை வளப்படுத்துவோம் என்றார்.
அவர் தொடர்ந்து, ஜனநாயகத்தின் முக்கிய பகுதியாக மும்பை மாநகராட்சி உள்ளது. பால் தாக்கரேவின் 100-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அவருடைய கனவுகளை நிறைவேற்ற முயற்சித்து கொண்டிருக்கிறோம் என கூறினார்.
இதேபோன்று மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, மும்பையை உலக தரம் வாய்ந்த நிதி மற்றும் தொழில்நுட்ப தலைநகராக உருவாக்க மும்பை மாநகராட்சியுடன் அரசு இணைந்து பணியாற்றும் என கூறினார். மும்பை மாநகராட்சிக்கு 44 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் மேயராகி உள்ளார்.