

பாட்னா,
பீகார் மாநிலம் ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் காய்கறி மார்க்கெட் பகுதியில், சிகப்பு நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.
பின்னர் அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதையடுத்து அந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதியில், சூட்கேசில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.