

கடவுள் முருகர் சூரபத்மனை அழித்து, தீமைகளை வென்றதைக் குறிக்கும் விதமாக, தை மாதம் வரும் பவுர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் தனது அன்னை பார்வதியிடம் இருந்து ஞானவேல் வாங்கிய தினம் ஆகும். அதுமட்டும் இன்றி சிவபெருமான் உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் புரிந்த திருநாளாகவும், முருகனுக்குக் காவடி நேர்த்திக்கடன் செலுத்தும் சிறப்பு நாளாகவும் தைப்பூசம் நாள் போற்றப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க நாளில் முருகப்பெருமைனை வழிபட்டால் தீமைகள் அழிந்து நன்மைகள் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் முருகபெருமானை பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். தைப்பூசதினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.