

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது;-
“அமெரிக்கா உடனான ஒப்பந்தம் காரணமாக இந்திய சந்தைகளில் அமெரிக்க விவசாய பொருட்களின் இறக்குமதி அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவின் கிராமப்புறங்களுக்கு பணம் செல்லும். அமெரிக்க விவசாயிகள் பயனடைவார்கள்.
அரசாங்கம் இந்திய விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுகிறதா? அல்லது விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறதா? ‘அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் நலனை பாதிக்கும். அரசாங்கம் இந்திய விவசாயத் துறையை அழிக்க நினைக்கிறது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரி பூஜ்ஜியமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள் அழிக்கப்படுவார்கள்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றி அரசாங்கத்திடமிருந்து அறிவிப்பு வரவில்லை. மாறாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடமிருந்து அறிவிப்பு வந்தது. இது இந்திய நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும். இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவிலிருந்து டிரம்ப் கூறுகிறார்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.