

கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கடந்த மாதம் மத்தியில் நிபா வைரசின் பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதில், தொற்று உறுதியான 2 நர்சுகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.
அவர்களில் ஆண் நர்ஸ், புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர். பெண் நர்ஸ் புர்பா பர்தமான் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இவர்கள் தவிர, டாக்டர், நர்ஸ் மற்றும் சுகாதார ஊழியர் என பலருக்கும் தொற்று உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்த, 190 பேருக்கும் மேற்பட்டோரை பரிசோதித்ததில், அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதியானது.
இவர்களில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய பராசத் பகுதியை சேர்ந்த 25 வயது கொண்ட நர்சு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.
அந்த பெண் நர்சுடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஆண் நர்சு குணமடைந்து வீடு திரும்பி விட்டார். ஆனால், பெண் நர்சு உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டதும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். சமீபத்தில் தொற்று இல்லை என முடிவு வந்த நிலையில், இணை நோய்கள் மற்றும் நுரையீரல் பாதிப்புகளால் அவர் பலியாகி உள்ளார் என அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
10 ஆண்டுகளில் இல்லாத வகையில், நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பெண் நர்சு மரணம் அடைந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.