

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இடம் பெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கு செல்லுமா? இல்லை மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இருப்பினும், தேமுதிக சார்பில் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிகவைப் பொறுத்தவரை, இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடம் உள்ளிட்டவற்றை பிரேமலதா விஜயகாந்த் எதிர்பார்ப்பதாகவும், இதனால், திமுக, அதிமுக கட்சிகள் தயக்கம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும், இரு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில், மகா சிவராத்திரியான இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர்.
எஸ்.பி. வேலுமணி - பிரேமலதா சந்திப்பு காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.