ஆட்சி அதிகாரத்தில் பங்கு: டெல்லி தலைமைக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அனுப்பிய மின்னஞ்சலால் பரபரப்பு

ஆட்சியில் பங்கு என்பதை தமிழகத்தில் ஏற்க முடியாது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கூறியிருந்தார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு: டெல்லி தலைமைக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அனுப்பிய மின்னஞ்சலால் பரபரப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 2006-ம் ஆண்டு தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று வரும் காங்கிரஸ் கட்சி, 5-வது முறையாக இந்த தேர்தலிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை திமுக தலைமையிடம் முன்வைத்து வருகிறது.

ராகுல்காந்தி வலியுறுத்தல்

நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசியபோது, ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

ஆனால், 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற கொள்கையுடன் இயங்கும் திமுக, காங்கிரஸ் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. அதை, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், "ஆட்சியில் பங்கு என்பதை தமிழகத்தில் ஏற்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

திமுகவுக்கு குடைச்சல்

என்றாலும், 'ஆட்சியில் பங்கு' என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக, மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டாக, டெல்லியில் உள்ள அகில இந்திய தலைமைக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

அதில் முக்கியமாக, ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள், வாரியம் முதல் கூட்டுறவு சங்கங்கள் வரை பதவி, உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க வகையில் இடஒதுக்கீடு போன்றவை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், அதற்கான காரணமும் விளக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் கண்ட திமுக - காங்கிரஸ் கூட்டணி

இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஆகியோர் நாளை (செவ்வாய்கிழமை) தமிழகம் வர இருக்கின்றனர். சென்னையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் அவர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதன்பிறகு, திமுக தலைமையை சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக தலைமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com