

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே, தாளமுத்து நடராஜன் மைதானத்தில் வரும், 13- ஆம் தேதி த.வெ.க., சார்பில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் சேலம் மாவட்ட த.வெ.க. மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமையில், தெற்கு மாவட்ட செயலர் பிரசன்னகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரியிடம் மனு வழங்கினர்.
இதையடுத்து அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் பரவாசுதேவன் மற்றும் போலீசார், தாளமுத்து நடராஜன் மைதானத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அதன் அறிக்கையை கமிஷனர் அனில்குமார் கிரியிடம் வழங்கினர். அறிக்கையை ஆய்வு செய்த போலீசார் வரும், 13ல் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த முக்கிய ஆவணங்கள் கடிதத்தில் இல்லாததால், கூட்டம் நடத்த அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள குறைகளை இன்றே நிவர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. வழக்கமாக 10 நாட்களுக்குள் மனு கொடுத்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில், சேலம் மாநகரில் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.