

சென்னை,
தஞ்சையில் ரூ.15 கோடியில் கட்டப்படும் கடற்பசு பாதுகாப்பு மையத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் அடிக்கல் நாட்டினார். தஞ்சை மாவட்டம் மனோரா கடற்கரையில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பு மையம் கட்டப்பட இருக்கிறது. பாக். விரிகுடா, மன்னார் வளைகுடா உள்ளடக்கிய 448 சதுர கி.மீ. பரப்பளவில் கடற்பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சென்னையில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து காலநிலை மாநாட்டை சிறப்பாக நடத்தி வருகிறோம்.
அதிகரிக்கும் வெப்பநிலை, அதிக மழைப்பொழிவு, புயல், வறட்சி போன்றவை தற்போதைய பிரச்சினைகளாக உள்ளன.
காலநிலை மாற்றம் எங்கோ நடக்கும் சம்பவம் கிடையாது. நமக்கும் அது அன்றாட நிகழ்வு.
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை கார்பன் சமநிலையாக மாற்ற திட்டமிட்டு வருகிறோம்.
மாநிலத்தின் கார்பன் உமிழ்வை குறைக்க 2030க்குள்ளான மாநில பங்களிப்பை உருவாக்கி இலக்காக்கப்படும்.
மாநிலம் முழுவதும் 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.
இனி வரும் காலங்களில் அனைத்து துறைகளின் திட்டங்களும் காலநிலை நடவடிக்கையோடு இயைந்து செயல்படும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்படும்.
சென்னையில் 380 மின் பேருந்துகள் உள்ளன. தமிழகத்தில் 2030க்குள் 33 சதவீதம் பேருந்துகளை மின் பேருந்துகளாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின் வாகனங்களுக்கு 2027 வரை சாலை வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.