

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கோட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிராஜின் மனைவி இசக்கியம்மாள் (வயது 25). இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கோணி வியாபாரி மகாராஜன்(50) என்பவர், நேற்று மாலை மதுபோதையில் கத்தியுடன் இசக்கியம்மாள் வீட்டிற்குள் புகுந்து, அவரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த இசக்கியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டதால், மகாராஜன் தனது வீட்டிற்கு ஓடிச் சென்று போலீசுக்குப் பயந்து அங்கிருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார்.
கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இசக்கியம்மாள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விஷம் குடித்த மகாராஜனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.