

பூந்தமல்லி,
திருவாடனை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் நடிகர் கருணாஸ். முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.
கடந்த 16-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாகவும், போலீஸ் அதிகாரி ஒருவரை காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்தும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும் கருணாஸ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருணாஸ் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து முதல்-அமைச்சர், போலீஸ் அதிகாரியை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே கருணாசை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். மேலும் சில கட்சி தலைவர்கள் கருணாஸ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி பேசியதற்காக கருணாஸ் வருத்தம் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கடந்த 2 நாட்களாக பரவியது. இந்நிலையில் நேற்று அதிகாலை திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் செல்வநாகரத்தினம், உதவி கமிஷனர்கள் முத்துவேல் பாண்டியன், கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சாலிகிராமம் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள கருணாசின் வீட்டை திடீரென சுற்றி குவிக்கப்பட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் அவரது அமைப்பினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சுமார் 5.20 மணிக்கு கருணாசின் வீட்டுக்குள் போலீசார் நுழைந்தனர். சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய வழக்கில் கைது செய்ய இருப்பதாக கருணாசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கருணாசை கைது செய்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அவருடைய வீட்டில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிர்வாகி செல்வநாயகமும் கைது செய்யப்பட்டார்.
அப்போது கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒரு எம்.எல்.ஏ.வை கைது செய்ய அரசியல் அமைப்பு சட்டப்படி சபாநாயகரிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். என்னை கைது செய்ய போலீசாருக்கு, அரசு அனுமதி அளித்துள்ளதா? என்று எனக்கு தெரியாது. மேடையில் பேசிய பேச்சுக்காக கொலை முயற்சி வழக்கு போடக்கூடிய அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை.