ஜாம்பவான்கள் செஸ்: ஆனந்தை மீண்டும் வீழ்த்தி காஸ்பரோவ் முன்னிலை

கோப்புப்படம்
விஸ்வநாதன் ஆனந்த்- ரஷியாவின் கேரி காஸ்பரோவ் இடையிலான கிளட்ச் செஸ் ஜாம்பவான்கள் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
செயின்ட் லூயிஸ்,
முன்னாள் உலக செஸ் சாம்பியன்களான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்- ரஷியாவின் கேரி காஸ்பரோவ் இடையிலான கிளட்ச் செஸ் ஜாம்பவான்கள் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் இருவரும் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் முறையில் தலா 6 ஆட்டங்களில் மோத வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ரேபிட், பிளிட்ஸ் வடிவில் தலா இரு ஆட்டம் நடைபெறும். முதல் நாளில் நடந்த 4 ஆட்டங்கள் முடிவில் ஒரு வெற்றி, 3 டிரா கண்ட காஸ்பரோவ் 2½-1½ என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தார். இந்த நிலையில் 2-வது நாளான நேற்று முன்தினம் இரவு நடந்த ரேபிட் பிரிவின் முதலாவது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய கேரி காஸ்பரோவ் 32-வது நகர்த்தலில் ஆனந்தை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் வெற்றியை நெருங்கிய ஆனந்த் கடைசி கட்டத்தில் தனது ஆட்ட நேரம் முடிய போவதை சரியாக கவனிக்க தவறியதால் தோல்வியை தழுவ நேர்ந்தது. இதன் 2-வது ஆட்டம் 40-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
இதேபோல் பிளிட்ஸ் பிரிவில் முதலாவது ஆட்டத்தில் காஸ்பரோவ் 18-வது நகர்த்தலில் ஆனந்தை எளிதில் தோற்கடித்தார். இதன் 2-வது ஆட்டம் 38-வது நகர்த்தலில் டிரா ஆனது. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் காஸ்பரோவ் 8½-3½ என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.






