

சென்னை,
வானத்திலிருந்து திடீர் சத்தம் கேட்டதால் மயிலாடுதுறை மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அளித்துள்ள விளக்கத்தில், "மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை 10.20 மணி முதல் 10.30 மணி வரை அதிக சத்தம் உணரப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட சத்தம் 'ஜெட்' பயிற்சி விமான சத்தம் என்பதையும், நில அதிர்வு அல்லது நிலநடுக்கம் எதுவும் மேற்கண்ட பகுதிகளில் ஏற்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். தவறான தகவலைப் பரப்பாதீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.