

பி. சண்முகம் தயாரிப்பில் எஸ்.ஏ. விஜயகுமார் இயக்கியுள்ள Arisi படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் முத்தரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சீசர் மனோகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் பேசும்போது, “நான் சினிமாவில் இருந்து வெளியே வந்து மக்கள் பணியில் இருக்கிறேன். ஆனால் முத்தரசன் மக்கள் பணியில் இருந்து சினிமாவுக்கு சென்றுள்ளார். அவர் சினிமாவின் உச்சத்துக்கு சென்றாலும்… தனது வாழ்க்கைப் பயணத்தின் உச்சத்துக்கு சென்றாலும்… மக்களுடன் மக்களாகவே இருப்பார்,” என்று சிரித்தபடி கூறினார்.
“அரிசிக்காக ஒரு காலத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். அரிசியின் மகிமையை புரிந்துதான் ரூ.2-க்கு ஒரு கிலோ அரிசி என முதன்முதலில் கருணாநிதி அறிவித்தார். அதன் பிறகு ரூ.1 என்றாகி, இன்று விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. மக்களின் அடிப்படை தேவையான அரிசி பிரச்சினையை தீர்த்தவர் கருணாநிதிதான். விவசாயிகளின் உரிமைக்கான இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.
நடிகர் விஜய், “எனது வாழ்க்கைப் பயணத்தின் உச்சத்தை உதறிவிட்டு, மக்களை நம்பி வந்திருக்கிறேன்,” என்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது மிகப்பெரிய அளவில் வைரலானது. இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு, விஜய்யின் அந்த கருத்தை கலாய்க்கும் வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது.