‘தேர்தல் தோல்வி பயம், முதல்-அமைச்சரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பார்த்தீர்களா?’ - எடப்பாடி பழனிசாமி

தேர்தல் பயத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
‘தேர்தல் தோல்வி பயம், முதல்-அமைச்சரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பார்த்தீர்களா?’ - எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தேர்தல் பயத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“தேர்தல் தோல்வி பயம், முதல்-அமைச்சரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக ‘1000 ரூபாய்’ கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து ‘கோடைக்கால சிறப்புத் தொகை’ கொடுக்கிறாராம்.2024, 2025-ம் ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா?

சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது ‘தேர்தல் நேரத்து பணம்’ வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?

செப்டம்பர் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ.34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை வீடு வீடாக சென்று அ.தி.மு.க. அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?

இப்போது ‘மாதம் 2000 ரூபாய்’ என்று நான் அளித்த அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில் இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே...

யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து ‘ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்’ என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. ‘அனைத்து குடும்ப அட்டைக்கும்’ என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.

தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அ.தி.மு.க. ஆட்சியில், தமிழக பெண்களுக்கு ‘குல விளக்குத் திட்டம்’ முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2,000 என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com