வடலூரில் ஜோதி தரிசன விழா ; பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
வடலூரில் ஜோதி தரிசன விழா ; பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் பூச பெருவிழாவில் 7 திரைகள் விலக்கப்பட்டு 6 கால ஜோதி தரிசனம் நடைபெறும்.

அதன்படி 151ஆவது தைப்பூசம் விழா திங்கள்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. 151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா நடந்தது.

வள்ளலாரின் பாடல்கள் பாடப்பட்டு 7 திரைகள் விலக்கப்பட்டு அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் நேரடியாக ஜோதி தரிசனம் காண அனுமதிக்கப்படவில்லை.

எனினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் ஏராளமாக குவிந்திருந்தனர். அதன் பின்னர் காலை 10 மணிக்கு இரண்டாம் கால ஜோதி தரிசனம் நடைபெற்றது.

பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

நாளை புதன்கிழமை காலை 5.30 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனம், 20 ஆம் தேதி வியாழக்கிழமை மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் திருஅறை தரிசனம் நிகழ்வுக்கு இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com