

சென்னை,
பிரதமர் மோடி மார்ச் 1-ந்தேதி மதுரைக்கு வர உள்ளார். அங்கு சில நிகழ்ச்சியில் பங்கு பெற்று விட்டு, கூட்டணி கட்சிகள் பங்கு பெறும் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். எனவே இந்த கூட்டத்தில் புதியதாக கூட்டணிக்கு வரும் தலைவர்களையும் பங்கு பெற வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. சட்டசபை தேர்தல் பிரசாரம், தொகுதி பங்கீட்டை எப்போது தொடங்குவது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சட்டசபையில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் மக்கள் பிரச்சினையை ஒன்றாக முன்னெடுத்து பேசுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது தொடர்பாக நயினார் நாகேந்திரன் எக்ஸ் வலைத்தள பக்கத்தில், 'இன்றைய தினம் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினேன். இந்த நிகழ்வில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் உடன் இருந்தார்.' என்று குறிப்பிட்டுள்ளார்.