

மதுரை,
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நகை திருட்டு என அவர் மீது பேராசிரியை நிகிதா அளித்தது பொய் புகார் என சி.பி.ஐ. அளித்த தகவலை தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அறிவுறுத்தினார்.
இந்தநிலையில், மதுரையில், மடப்புரம் அஜித்குமாரின் குடும்பத்தினர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நிகிதா அளித்த பொய் புகாரில் காவலாளி அஜித்தை காவலர்கள் தாக்கியதாக சிபிஐ கூறியுள்ளது.
நிகிதாவை கைது செய்ய வேண்டும். அஜித்குமார் மரணம் லாக்அப் டெத் என நீதிமன்றத்தில் சிபிஐ கூறியது. என் மகனை அடிக்க யார் உத்தரவிட்டது? போலீஸ் சோதனையில் எங்கள் வீட்டில் நகை எதுவும் கிடைக்கவில்லை. நிகிதா பொய் புகார் அளித்தும் ஏன் தீவிர நடவடிக்கை எடுத்தனர்?
உணவு கூட கொடுக்காமல் என் மகனை அடித்து கொலை செய்துள்ளனர். என் மகன் தீவிரவாதியா? மிளகாய் பொடி கொடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர் , காவல்துறையினர் மனித பிறவிகளா? என் மகன் அஜித்குமார் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்து இருந்தார். அஜித்குமார் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.