

சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த சூழலில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது” என பேசியிருந்தார். அதே சமயம், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006-ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் காங்கிரஸ் கட்சியின் தவறு” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. 96 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 34 இடங்களை வென்றிருந்தது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்களில் தி.மு.க.விற்கு கிடைக்காத நிலையில், அரசில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 2006 தேர்தலை சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டிருக்கும் பதிவு கவனம் பெற்றுள்ளது.