லாரியில் கடத்த முயன்ற 5¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 5¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரேஷன் கடை பெண் விற்பனையாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாரியில் கடத்த முயன்ற 5¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரேஷன் கடை பெண் விற்பனையாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்புக்கு ரகசிய தகவல் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, நேரு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று ஓசூர் எஸ்.எல்.வி நகர் பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த சர்தார் என்பவரது வீடு மற்றும் அங்கு நின்று இருந்த லாரியில் போலீசார் திடீரென சோதனை செய்தனர். அந்த லாரியில் 105 மூட்டைகளில் ரேஷன் 5.250 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் சர்தாரிடம் விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது

அப்போது அவர் சென்னத்தூர் மற்றும் சானசந்திரம் ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்களில் போலீசார் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக சர்தார், சூளகிரி கிருஷ்ணபாளையம் மணிகண்டன் (35), காட்டிநாயனப்பள்ளி அரவிந்த் (24), வசந்த் (25), சென்னத்தூர் ரேஷன் கடை விற்பனையாளர் உமாமாதேஸ்வரி (33) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com