ரயில்வே திட்டங்களுக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் தாமதமின்றி முழுமையாக முன்னுரிமை அடிப்படையில் விடுவித்திட கோரி முதல் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
ரயில்வே திட்டங்களுக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
Published on

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மத்திய அரசினால் நிறைவேற்றப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு, குறிப்பாக, நிலம் கையகப்படுத்துதலுக்கான நிதியை முறையாக விடுவித்தல் மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்குதல் போன்றவற்றில் பிரதமர் மோடி தலையிட்டு உரிய நேரத்தில் தீர்வு காணவேண்டும். தமிழ்நாட்டில்,மத்திய அரசின் பல்வேறு ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 2500.61.06 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 931.52.96 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு ரயில்வே துறை நிதியை ஒதுக்கவில்லை. ரயில்வே துறையிடமிருந்து சமீபத்தில் திருத்தப்பட்ட நிலத் திட்ட அட்டவணை (LPS) பெறப்பட்ட இரண்டு திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி செயல்பாட்டில் உள்ளது.அது விரைவில் வழங்கப்படும் .

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களான திண்டிவனம்-நகரி அகல இரயில் பாதை, மதுரை-தூத்துக்குடி அகல இரயில் பாதை, மணியாச்சி-நாகர்கோவில் அகல இரயில் பாதை, கன்னியாகுமரி-நாகர்கோவில் அகல இரயில் பாதை இரட்டிப்பாக்குதல், நாகர்கோவில்-இரணியல் அகல இரயில் பாதை இரட்டிப்பாக்குதல், தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல இரயில் பாதை (கட்டம்-I), சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல இரயில் பாதை, மயிலாடுதுறை-திருவாரூர் அகல இரயில் பாதை, பட்டுக்கோட்டை நான்கு முனை சந்திப்பு, புதிய அகல இரயில் பாதை (சேலம்-கரூர் வழித்தடம் உருவாக்குதல்), மன்னார்குடி-நீடாமங்கலம் அகல இரயில் பாதை, சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை மூன்றாவது, நான்காவது வழித்தடம் மற்றும் விழுப்புரம்-திண்டுக்கல் அகல இரயில் பாதை ஆகிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

நில எடுப்புப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு நில உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்குவது மிக முக்கியம். துரதிர்ஷ்டவசமாக, ரயில்வே அமைச்சகத்தால் நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்கள், தனிப்பட்ட திட்டங்களுக்குப் பெரும்பாலும் நிதியினை முழுமையாக வழங்காமல் பிரித்து வழங்குவது என்பது, தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தினைத் தடுத்து, தாமதங்களுக்கு வழிவகுத்துள்ளது. பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நீடித்த நிச்சயமற்றதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

'திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையேயான அகல ரயில் பாதை இரட்டிப்பு' திட்டத்திற்கான 16.86.51 ஹெக்டேர் நில எடுப்புப் பணி முடிக்கப்படாமல் இருப்பது இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம். இத்திட்டத்திற்கான நில எடுப்பிற்கு உரிய இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான 289.78 ரூபாய் கோடி நிதியினை ரயில்வே துறை இன்னும் ஒதுக்கவில்லை. இது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு பெரிய திட்டம். மத்திய அரசின் திட்டக் கண்காணிப்புக் குழுவின் (PMG) வலைதளத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது . நிலம் கையகப்படுத்துதலுக்கான நிதியை பகுதி, பகுதியாக வழங்குவதற்குப் பதிலாக, மொத்தமாக, சரியான நேரத்தில் ஒதுக்குவதன் மூலம், இந்த முக்கியமான திட்டங்களைத் தடையின்றி விரைவாக முடிக்க முடியும்.

இந்தத் தருணத்தில், சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது. இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான முக்கிய மையமாகவும் விளங்கும் தமிழ்நாடு, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குத் தொடர்ந்து கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது. மேம்பட்ட ரயில் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மூலம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் மகத்தான ஆற்றலை தமிழ்நாடு கொண்டுள்ளது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, நில எடுப்பு மற்றும் இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்திட ஏதுவாக, அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்குத் தேவையான நிதியை தாமதமின்றி, முழுமையாக, முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்கவும்; ரயில்வே துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முக்கியமான திட்டங்களான தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழியாக) புதிய அகலப்பாதை மற்றும் திண்டிவனம்-திருவண்ணாமலை அகலப்பாதை (ஏற்கெனவே 931.52.96 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன) திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், இதற்குத் தேவையான நிதியினை வழங்கிடவும்; தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப, கூடுதலாக புதிய ரயில் திட்டங்களை அனுமதிப்பது குறித்து பரிசீலித்திட வேண்டும்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தமிழ்நாடு அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்துள்ள முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இதுதொடர்பாக பிரதமரிடம் இருந்து விரைவில் சாதகமான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com