

சென்னை,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக காலியாக உள்ள 6 மேல் சபை எம்.பி. பதவிகளுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, பி.செல்வராசு, திருச்சி சிவா, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரின் பதவிக்காலமும், அதிமுகவை சேர்ந்த எம்.தம்பிதுரை, அதிமுக கூட்டணியை சேர்ந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது.
தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல் வரும் 26-ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5-ந்தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 6-ந்தேதி நடக்கும் நிலையில், மார்ச் 9-ந்தேதி மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை உறுப்பினர்களில், ஒரு கட்சிக்கு 32 உறுப்பினர்கள் இருந்தால் ஒரு மேல்சபை எம்.பி.யை தேர்வு செய்ய முடியும். அந்த வகையில், தற்போது காலியாக உள்ள 6 மேல்சபை எம்.பி. பதவிகளில் 4 திமுகவுக்கும், 2 அதிமுகவுக்கும் கிடைக்கும்.
அந்த வகையில், திமுக, அதிமுக சார்பில் மேல்சபை எம்.பி.க்களாக ஆகப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திமுகவை பொறுத்தவரை 4 இடங்களுக்கும் அக்கட்சியில் இருந்தே வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
அதே நேரத்தில், அதிமுகவில் மேல்சபை எம்.பி. பதவியை பெற கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. கடந்த (2024) நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியும் தருவதாக அதிமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், கடந்த முறை மேல்சபை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டபோது தேமுதிகவுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக சார்பில் மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதியளித்து ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, அடுத்த முறை (தற்போது) தேமுதிகவுக்கு மேல்சபை எம்.பி. பதவி அளிக்கப்படும் என்ற உறுதியை அதிமுக தலைமை அளித்தது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் அதிமுக கூட்டணியை இன்னும் உறுதிப்படுத்தாமல் தேமுதிக காலம் தாழ்த்தி வருகிறது.
இதேபோல், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் மேல்சபை எம்.பி. பதவியை எதிர்பார்க்கிறதாம். அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே மேல்சபை எம்.பி.யாக இருந்தார். தற்போதும் அப்பதவியை அவர் கேட்டுவருகிறாராம். மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள டி.டி.வி.தினகரன் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். அவரும் மேல்சபை எம்.பி. பதவியை எதிர்பார்க்கிறாராம்.
தற்போது, அதிமுகவிடம் இருப்பது 2 மேல்சபை எம்.பி. பதவி. ஆனால், தேமுதிக, பாமக, அமமுக என 3 கட்சிகள் அதற்கு போட்டி போடுகின்றன. அதிமுகவும் தனியாக வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்தால், 2 இடத்திற்கு 4 பேர் போட்டி என்ற நிலை உருவாகிவிடும். அதிமுக தலைமை இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது? என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.