

சென்னை,
பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலின் மையப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மேலும் வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். 19-ந் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
20-ந்தேதி தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 21-ந்தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக் கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
22-ந் தேதி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். 19, 20 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுள்ளது.