ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல்

ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல்
Published on

ஹர்டோம்,

சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.

ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படை தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. துணை ராணுவத்தின் தளபதி ஜெனரல் முகமது ஹம்டனுடன் இந்த அதிவிரைவு ஆதரவு படையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், ராணுவத்திற்கும் - துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்படது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.

இந்த மோதலால் தலைநகர் ஹர்டோமில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ராணுவ தளங்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில் உயிரிழப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை, ராணுவம் - துணை ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் சூடானில் வசிக்கும் இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மோதல் நீடித்து வருவதால் சூடானில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com