

லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரெண்ட் என்ற இடத்தில் கிங்ஸ்பரி என்ற பெயரில் உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மதிய உணவு நேரத்தில் நேற்று 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கையில் கத்தியுடன் உள்ளே புகுந்துள்ளான்.
அவன் திடீரென 12 மற்றும் 13 வயது கொண்ட 2 மாணவர்களை கத்தியால் குத்தி தாக்கினான். இந்த தாக்குதலில் அவர்கள் படுகாயமடைந்தனர். இதன்பின்னர், பூச்சிக்கொல்லிக்கு பயன்படுத்தும் ஸ்பிரே ஒன்றை கொண்டு, மற்றொரு மாணவனை தாக்க முற்பட்டான்.
இதுபற்றி லண்டன் பெருநகர போலீசார் கூறும்போது, அந்த சிறுவனின் வயது, பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படாது என தெரிவித்தனர். அவனை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அந்த மாணவன் பள்ளியின் முன்னாள் மாணவன் என கூறப்படுகிறது. எனினும், அரபியில் கடவுளே பெரியவன் என பொருள் தரும் அல்லாஹு அக்பர் என அந்த மாணவன் கத்தியபடி தாக்குதலில் ஈடுபட்டான் என சம்பவத்தின்போது, அந்த பகுதியில் இருந்தவர்கள் சாட்சி கூறியுள்ளனர்.
இதனால், அந்த பள்ளியில் 7 முதல் 9 வயது வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று செயல்படாது. அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், நாளை முதல் முழு அளவில் பள்ளி இயங்கும் என கூறப்படுகிறது