

பிராசவில்லி,
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ குடியரசு. இந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனிம சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் சில சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. மேலும், காங்கோவின் பல்வேறு பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அப்பகுதியில் உள்ள சுரங்கங்களில் இருந்து கனிமங்களை வெட்டி எடுத்து கிளர்ச்சியாளர்கள் பிற நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் கொபா நகரில் கனிம சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் பலரும் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள், அருகில் இருந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் மண்ணுக்குள் புதைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.
மேலும், பலர் படுகாயமடைந்தனர். சுரங்கம் இடிந்த சம்பவத்தில் மேலும் பலர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.