

லாஸ் வேகாஸ்,
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த வாரம் 2 பேர் கொடிய பாதிப்புகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன பாதிப்பு என கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. புறநகர் பகுதியில் வசிக்கும் அவர்களுடைய வீட்டில் பிரிட்ஜில் இருந்த அடையாளம் தெரியாத திரவங்கள் உள்பட உயிரி பொருட்களால் அவர்கள் தாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
உடனடியாக போலீசார் வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது, திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. வீட்டில் சட்டவிரோத வகையில் உயிரி ஆயுத ஆய்வகம் செயல்பட்டு உள்ளது. அதனை அவர்கள் விரைவாக அகற்றினர். அது வழக்கம்போல் செயல்பட கூடிய ஆய்வகம் போல் இல்லை.
இதனை தொடர்ந்து எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்ததில் அந்த ஆய்வகத்திற்கு கலிபோர்னியாவில் உள்ள மற்றொரு சட்டவிரோத ஆய்வகத்துடன் உள்ள தொடர்பு தெரிய வந்தது. அந்த கலிபோர்னிய ஆய்வகம் 2023-ம் ஆண்டு மூடப்பட்டு உள்ளது.
அந்த ஆய்வகத்திற்கு சீன வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான நிதியுதவி கிடைத்திருக்கிறது. அந்த ஆய்வகத்தில் மரபணு மாற்றப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலிகள் பிடித்து வைக்கப்பட்டு இருந்தன. மலேரியா, கொரோனா மற்றும் எபோலா போன்ற பல்வேறு கொடிய வியாதிகளின் பரிசோதனை மாதிரிகளும் இருந்துள்ளன.
இதுபோன்று எத்தனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன என எங்களுக்கு தெரியவில்லை என அமெரிக்கா எச்சரிக்கை தெரிவித்து உள்ளது. சில நாடுகளில் மரபணுவை ஆன்லைன் வழியே, எந்தவித முன்அனுமதி இன்றி வாங்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது. இதனால், பெரிய ஆபத்துகள் ஏற்பட கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.