குமரி: பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி

வைகாசி விசாகத்தையொட்டி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது
குமரி: பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி
Published on

உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்தகோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

9-ம் திருவிழாவான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. மாலை 6-30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு7-30மணிக்கு தேவார இன்னிசையும், 8-45மணிக்கு பக்தி பஜனையும், 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடந்தது.

10-ம் திருவிழாவான இன்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி உற்சவ அம்பாளை கோவிலில் இருந்து வாகனத்தில் அலங்கரித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலின் கிழக்கு வாசல் முன்பு அமைந்துள்ள ஆராட்டு மண்டபத்துக்கு எடுத்து வந்தனர்.

பின்னர் ஆராட்டு மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், தீபாரதனை நடந்தது அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் உற்சவ அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.

உற்சவ அம்பாளை கோவில் மேல்சாந்திகள் கடல் தீர்த்தத்தில் ஆராட்டினார்கள். அதைத்தொடர்ந்து ஆடி அமாவாசை, தை அமாவாசை, கார்த்திகை தீபத் திருவிழா, நவராத்திரி விஜயதசமி திருவிழா, வைகாசி விசாகம் ஆகிய 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் இன்று காலை 9-30 மணிக்கு திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதைத்தொடர்ந்து அந்த வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். இந்த ஆராட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு நர்த்தனபஜனையும் நடக்கிறது. 9- மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு மீண்டும் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com