

சென்னை,
10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 39வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - கனடா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கனடா அணியின் கேப்டன் தில்பிரீட் பாஜ்வா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ், ஜத்ரான் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். குர்பாஸ் 30 ரன்களும், அடல் 44 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஜத்ரான், 56 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 95 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. கனடா தரப்பில் ஜகரன் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கனடா அணி களமிறங்கியது. ஹர்ஷ் தாக்கர் 30 ரன்னும், சாத் பின் ஜாபர் 28 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.இறுதியில், கனடா அணி 20 ஓவரில் 118 ன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 4 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.