

புலவாயோ,
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் ‘சூப்பர்6’ சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த நிலையில் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றின் கடைசி ஆட்டம் புலவாயோவில் இன்று நடைபெற்றது . இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் (குரூப் 2) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பர்ஹான் யூசப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் வைபவ் சூர்யவன்ஷி 30 ரன்களும் , ஆயுஷ் மாத்ரே ரன் எதுவும் எடுக்காமலும் , ஆரோன் ஜார்ஜ் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வேதாந்த் திரிவேதி மட்டும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். பொறுப்புடன் விளையாடி அரைசதமடித்து 68 ரன்கள் எடுத்து வேதாந்த் திரிவேதி ஆட்டமிழந்தார். கனிஷ் சவுகான் 29 ரன்கள் எடுத்தார்.இறுதியில் 49.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் சார்பில் அப்துல் சுபன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 253 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் விளையாடியது.
தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் உஸ்மான் கான் மட்டும் நிலைத்து ஆடி 66 ரன்கள் எடுத்தார்.
இதனால் 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இந்திய அணி யு19 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது .