மணல் கடத்தியதாக கேரள பிஷப் உள்பட 6 பேர் கைது


மணல் கடத்தியதாக கேரள பிஷப் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2022 7:51 PM GMT (Updated: 5 Feb 2022 7:51 PM GMT)

கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணல் கடத்தியது தொடர்பாக கேரள பிஷப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:
கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணல் கடத்தியது தொடர்பாக கேரள பிஷப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மணல் கடத்தல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் மணல் எடுப்பதாக கூறி அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு, அந்த பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் உள்ள மணலை எடுத்து கழுவி நல்ல மணலாக்கி அதை கடத்துவதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் கிறிஸ்டி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மணல் கடத்தல் சம்பந்தமான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எம்.சாண்ட் மணலுக்கு பதிலாக பட்டா நிலத்தில் உள்ள மணலை கடத்தியதாக கேரளாவை சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். பலர் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். 

பிஷப் உள்பட 6 பேர் கைது

இந்த நிலையில் கேரள மாநிலம் பத்தனம்திட்டை கிறிஸ்தவ டயோசீசனுக்கு பாத்தியப்பட்ட நிலம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ளது. இங்கிருந்து மணலை எடுத்து கழுவி கடத்தப்பட்டது. 
இதுசம்பந்தமாக பத்தனம்திட்டை டயோசீசன் பிஷப் சாமுவேல் மாரிஏரேனியஸ் (வயது 69), பாதிரியார்கள் ஜார்ஜ்சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜியோ ஜேம்ஸ், ஜோஸ்சமதலாரி, ஜோஸ்கலவியால் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story