கை, கால்களை கட்டிப்போட்டு கணவர் கழுத்தை இறுக்கி கொலை பெண் வெறிச்செயல்


கை, கால்களை கட்டிப்போட்டு கணவர் கழுத்தை இறுக்கி கொலை பெண் வெறிச்செயல்
x
தினத்தந்தி 25 Jun 2017 11:15 PM GMT (Updated: 25 Jun 2017 9:04 PM GMT)

வாழப்பாடி அருகே குடிபோதையில் கணவர் தினமும் அடித்து உதைத்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கணவரின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தார்.

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மன்னாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 44), விவசாயி. இவருக்கு தனலட்சுமி(34) என்ற மனைவியும், புவனேஸ்வரி(18) என்ற மகளும், கணபதி(13), வசந்தகுமார்(10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

இதில் புவனேஸ்வரிக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக கணவர் வீட்டில் உள்ளார். கணபதி, வசந்தகுமார் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முறையே 8 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

முருகேசன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது குடும்ப செலவுக்கு மனைவி பணம் கேட்டால் அவரை அடித்து உதைத்து தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.

நிம்மதியாக வாழ முடியாது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல குடித்துவிட்டு முருகேசன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், தனலட்சுமிக்கும் இடையே பயங்கர தகராறு ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசி எறிந்து கணவர் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், மனைவி மற்றும் 2 மகன்களை அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து இரவு 10 மணிக்கு அனைவரும் வீட்டில் படுத்து தூங்கினர். ஆனால் தனலட்சுமி மட்டும் தூக்கம் வராமல் கவலையுடன் இருந்தார். 2 மகன்களை வளர்த்து ஆளாக்க வேண்டிய நிலையில், கணவர் இதுபோல் குடித்து விட்டு வந்து அடித்து உதைத்தால் நிம்மதியாக வாழ முடியாது என்று அவர் கருதினார்.

கழுத்தை இறுக்கி கொலை

இதைத்தொடர்ந்து கணவரை தீர்த்து கட்ட நினைத்த தனலட்சுமி, அவர் தூங்கும் வரை காத்திருந்தார். 2 மகன்களும் தூங்கி விட்டதை உறுதி செய்து கொண்ட தனலட்சுமி, நள்ளிரவு நேரத்தில் எழுந்தார். உடனே அவர் தூங்கி கொண்டு இருந்த கணவரின் கை,கால்களை அங்கு கிடந்த துணியை எடுத்து கட்டினார். பின்னர் துப்பட்டாவால் கணவரின் கழுத்தை இறுக்கினார்.இதில் முருகேசன் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். ஒருபுறம் பிணமாக கிடக்கும் கணவர், மறு பக்கம் தனது குழந்தைகள் அசந்து தூங்குவதை பார்த்து கண்ணீர் மல்க தனலட்சுமி அழுது கொண்டிருந்தார். பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு மேல் அவர் போலீசில் சரண் அடைய முடிவு செய்தார். இதையடுத்து அதிகாலை நேரத்தில் அவர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர் தனது கணவரை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

வழக்குப்பதிவு

உடனே வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தினர்.குடிபோதையில் தகராறு செய்து அடித்து உதைத்த கணவரை, மனைவியே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story