பள்ளியை தரம் உயர்த்த கோரி மாணவர்கள்-கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


பள்ளியை தரம் உயர்த்த கோரி மாணவர்கள்-கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2017 11:00 PM GMT (Updated: 1 Aug 2017 7:51 PM GMT)

தளவாய் கிராமத்தில் பள்ளியை தரம் உயர்த்த கோரி மாணவர்கள், கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்துள்ள தளவாய் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தளவாய், செங்கமேடு, ஈச்சங்காடு, சிலுப்பனூர், சேந்தமங்களம், முல்லையூர் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கடந்த 2009-ம் ஆண்டு கிராம மக்கள் வைப்புத் தொகையாக ரூ.2 லட்சம் செலுத்தினார்கள். வைப்புத் தொகை செலுத்தி 8 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசு இந்த பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வருடம் தமிழக அரசு பள்ளி தரம் உயர்த்திய பட்டியலில் தளவாய் பள்ளி இடம் பெறும் என கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தமிழக அரசின் அறிவிப்பில் தளவாய் பள்ளி இடம் பெறவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் தொடர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தளவாய் கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் வரை கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு வடிவிலான போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் உயர்நிலை பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். மேலும் தரம் உயர்த்தும் வரை பள்ளிக்கு செல்வதில்லை என மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். 

Next Story