பீரங்கியில் பயிற்சி எடுத்த போது வி‌ஷ வாயு தாக்கி ராணுவ வீரர் பலி


பீரங்கியில் பயிற்சி எடுத்த போது வி‌ஷ வாயு தாக்கி ராணுவ வீரர் பலி
x
தினத்தந்தி 17 Aug 2017 12:45 AM GMT (Updated: 16 Aug 2017 10:32 PM GMT)

பீரங்கியில் பயிற்சி எடுத்த போது வி‌ஷ வாயு தாக்கி ராணுவ வீரர் பலியானார்.

கடமலைக்குண்டு,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் பீரங்கி பயிற்சியாளராக வேலை பார்த்தார். நேற்று காலை இவர் வழக்கம் போல் ஒரு பீரங்கியில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பீரங்கியில் இருந்த ஒரு சிலிண்டர் தானாக திறந்து வி‌ஷவாயு வெளியேறியது. இதையடுத்து பீரங்கிக்குள் இருந்து வெளியேற சக்திவேல் முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது. இதற்கிடையே அவரை வி‌ஷ வாயு தாக்கியதில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் பயிற்சிக்காக சென்ற சக்திவேல் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகமடைந்த அதே பயிற்சி முகாமில் வேலை பார்க்கும் ரவி என்பவர் அவரை தேடிச்சென்றார். அப்போது பீரங்கிக்குள் சக்திவேல் பிணமாக கிடப்பதை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவருடைய உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பயிற்சி மைய அதிகாரிகள் கூறுகையில், பிரேத பரிசோதனை முடிந்த உடன் சக்திவேலின் உடல் இன்று (வியாழக்கிழமை) சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு அவருடைய இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றனர். இறந்த சக்திவேலுக்கு சுபலட்சுமி என்ற மனைவியும், சாதானாஸ்ரீ என்ற மகளும், சூரியபுத்திரன் என்ற மகனும் உள்ளனர். இவருடைய பணிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிய உள்ள நிலையில் அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.


Next Story