தூங்கிக்கொண்டிருக்கும் போது ஆடையை களைந்து இளம்பெண்ணை படம் பிடித்த வாலிபர் கைது


தூங்கிக்கொண்டிருக்கும் போது ஆடையை களைந்து இளம்பெண்ணை படம் பிடித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2017 11:30 PM GMT (Updated: 19 Oct 2017 10:39 PM GMT)

தூங்கிக்கொண்டிருக்கும் போது, ஆடையை களைந்து இளம்பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர்கள் இருவரும் கைதானார்கள்.

மும்பை,

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிண் நிர்வாண படம் ஒன்று சமீபத்தில் வாட்ஸ்–அப்பில் வெளியானது. தூக்கத்தில் இருக்கும் அந்த இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் நெருக்கமாக அந்த புகைப்படத்தில் இருந்தார். இதைப்பார்த்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த புகைப்படத்தை பார்த்து இளம்பெண்ணும் அதிர்ச்சியில் உறைந்தார். தன்னுடன் இருப்பது தனது ஆண் நண்பர் ஹிமான்சு ராத்தோடு(வயது23) என்பது அவருக்கு தெரியவந்தது. இருப்பினும் தான் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் எப்படி தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக படம் பிடித்தார் என்பது இளம்பெண்ணுக்கு தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் பங்குர்நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹிமான்சு ராத்தோடை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கீழ்க்கண்ட தகவல் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இளம்பெண்ணை ஹிமான்சு ராத்தோடு தனது நண்பர்களான பாருக் சேக்டா(21), சுல்தான் வஜிர் சேக்(24) ஆகியோருடன் ஹூக்கா பார்லருக்கு அழைத்து சென்றார். அங்கு ஹூக்கா புகைத்ததில் போதை மயக்கமும், தலைவலியும் ஏற்பட்டது.

இதையடுத்து இளம்பெண்ணை ஹிமான்சு ராத்தோடு உள்பட 3 பேரும் கோரேகாவில் உள்ள சுல்தான் வஜிர் சேக்கின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அங்கு இளம்பெண் அயர்ந்து தூங்கிவிட்டார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் ஹிமான்சு அவரது ஆடைகளை களைந்து, தானும் அவருடன் நெருக்கமாக இருப்பது போன்று செல்போனில் படமும் பிடித்துள்ளார். பின்னர் தனது நண்பர்கள் இருவரின் செல்போனிலும் அந்த புகைப்படத்தை பகிர்ந்தார்.

இந்தநிலையில், அவர்கள் மூலம் சமீபத்தில் அந்த புகைப்படம் அவர்களது தோழி ஒருவரின் வாட்ஸ்–அப்புக்கு பகிரப்பட்டு உள்ளது. அவர் தனது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுக்குன் அந்த படத்தை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாருக் சேக்டா, சுல்தான் வஜிர் சேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவான அவர்களது தோழியையும் போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story