காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி 2 குழந்தைகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி


காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி 2 குழந்தைகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 20 Nov 2017 11:00 PM GMT (Updated: 20 Nov 2017 10:03 PM GMT)

காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி, 2 குழந்தைகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் தளவாய்பட்டி சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் பகத்சிங், பொக்லைன் எந்திர டிரைவர். இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 23). இவர்கள் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று ஜெயந்தி தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.

அப்போது அவர் திடீரென ஒரு கேனில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து ஜெயந்தியிடம் இருந்த கேனை பறித்தனர். மேலும் அவர்கள் 3 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஜெயந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

நானும், எனது கணவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த 7 மாதங்களாக பகத்சிங் சரியாக வீட்டுக்கு வருவதில்லை. அவருக்கு தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணிடம் உள்ள தொடர்பை விட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வருமாறு பகத்சிங்கை அழைத்தேன். ஆனால் அவர் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார். எனவே அவரை என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஜெயந்தியையும், 2 குழந்தைகளையும் பாதுகாப்பாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளையும் பெண் போலீசார் பாதுகாப்பாக வைத்திருந்தனர். அங்கு ஜெயந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெயந்தி கலெக்டர் ரோகிணியிடம் மனு கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் கலெக்டர் உறுதி அளித்தார்.


Next Story