கீழக்குடிக்காடு தடுப்பணையை பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு


கீழக்குடிக்காடு தடுப்பணையை பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Dec 2017 10:30 PM GMT (Updated: 5 Dec 2017 7:14 PM GMT)

கீழக்குடிக்காடு தடுப்பணையை பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

மங்களமேடு,

வடகிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழக்குடிக்காடு தடுப்பணைக்கு, தொழுதூர் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள நீர் வந்தது. தடுப்பணையில் இருந்து அத்தியூர் ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டி இருந்ததால் வெள்ள நீர் வாய்க்காலின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் வெள்ளாற்றுக்கே சென்றது. இதனால் லெப்பைக்குடிக்காடு, பென்னகோணம், ஓகளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வரத்து வாய்க்காலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு பொதுப்பணித்துறையின் முலமாக கீழக்குடிக்காடு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை சுற்றியுள்ள கரைப்பகுதிகளை பலப்படுத்தும் வகையில் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் மழைக்காலங்களில் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் மக்களை அருகில் உள்ள பள்ளிகளிலோ, சமுதாய கூடங்களிலே தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், மழை மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் கண்காணிக்கவும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், குன்னம் வட்டாட்சியர் தமிழரசன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story