3 கோடி லிட்டர் சுத்திகரித்த தண்ணீரை வாங்க ஆள் இல்லை 2-வது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது


3 கோடி லிட்டர் சுத்திகரித்த தண்ணீரை வாங்க ஆள் இல்லை 2-வது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 14 Dec 2017 10:30 PM GMT (Updated: 14 Dec 2017 8:00 PM GMT)

கோவை உக்கடம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் 3 கோடி லிட்டர் தண்ணீரை வாங்க ஆள் யாரும் இல்லை. இதனால் தற்போது 2-வது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது.

கோவை,

கோவையின் பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் பாதாள சாக்கடை தண்ணீரை சுத்திகரிக்க உக்கடம், ஒண்டிப்புதூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் உக்கடத்தில் மட்டும் சுத்திகரிப்பு நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது. ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நிலையம் சோதனை அடிப்படையில் செயல்பட்டு அங்கு தினமும் 50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. நஞ்சுண்டாபுரத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருப்பதை எதிர்த்து வழக்கு தொடரப் பட்டது.

இந்த நிலையில் கோவையின் மேற்கு பகுதியில் சேகரமாகும் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் மூலம் உக்கடம் கழிவுநீர்பண்ணை அருகே கொண்டு வரப்பட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. தினமும் இங்கு 3 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. ரூ.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் தற்போது நொய்யல் ஆற்றில் விடப்படுகிறது.

தனியார் தொழிற்சாலைகள் முன்வரவில்லை

கடந்த 2010-ம் ஆண்டு இந்த சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்ட போது அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை விற்க வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் தான் அந்த திட்டம் முடிவானது. அதன்படி இந்த சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்ட போது பல தொழிற்சாலைகள் அந்த தண்ணீரை வாங்கிக் கொள்ள ஒப்புதல் தெரிவித்தன. ஆனால் தற்போது கோவையில் உள்ள எந்த தொழிற்சாலையும் அந்த தண்ணீரை வாங்கி கொள்ள முன்வரவில்லை. இதற்கான காரணம் என்ன என்றும் தெரியவில்லை.

சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர்கள் மூலம் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. இதற்காக ஆகும் மின்சார கட்டணம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாயாகும். இது தவிர அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கடந்த 2010-ம் ஆண்டு முதல் விற்க கோவை மாநகராட்சி முயன்று வருகிறது. இதற்காக முன்பு டெண்டர் விடப்பட்டு அந்த டெண்டரை யாரும் எடுக்க முன்வரவில்லை. இதனால் கடந்த 7 ஆண்டுகளாக சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் மீண்டும் திறந்தவெளியில் தான் விடப்படுகிறது. இதனால் சுத்திகரிக்க செலவிடப்படும் பணம் வீணாகிறது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான தேதி அடுத்த மாதம்(ஜனவரி)10-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் உயரும்

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

கோவை உக்கடம் கழிவுநீர் சுத்திரிகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட 3 கோடி லிட்டர் தண்ணீரை கோவையில் உள்ள எந்த தொழிற்சாலையும் வாங்க முன்வரவில்லை. ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.16.40 என்று விலை நிர்ணயித்துள்ளோம். இந்த விலைக்கு யார் வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் கோவையில் உள்ள தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்துவதினால் சுத்திகரித்த நீரை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் சென்னையில் சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை ஏராளமான தனியார் நிறுவனங்கள் வாங்கிக் கொள்கின்றன.

தற்போது 2-வது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதிலும் தனியார் நிறுவனங்கள் பங்கு கொள்ள வராவிட்டால் சுத்திகரிக்கப்படும் தண்ணீரை வெள்ளலூரில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொண்டு போய் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயத்துக்கு அளிக்க வேண்டும்

உக்கடம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரை விவசாயத்துக்கு வழங்க வேண்டும் என்று பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.ஆர்.ராஜகோபால் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

உக்கடம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை விவசாயத்துக்கு அளிக்க வேண்டும் என்று இதற்கு முன்பு பலமுறை கோரிக்கைகள் வைத்தோம். ஆனால் அதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த தண்ணீரை விவசாயிகளுக்கு கொடுத்தால் விவசாயிகள் மிகுந்த பயன்பெறு வார்கள். இதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசிடம் பேசி குழாய்கள் மூலம் சுத்திகரித்த தண்ணீரை விவசாயப் பகுதிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு உதவிகள்

விவசாய நிலங்கள் பாசன வசதிக்கான ஏற்பாடுகளை அரசு செய்து தருவதுபோன்று இந்த தண்ணீரையும் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்ல அரசு உதவிகள் செய்ய வேண்டும். பல லட்சம் ரூபாய் செலவு செய்து சுத்திகரிக்கப்பட்ட பாதாள சாக்கடை தண்ணீர் நொய்யல் ஆற்றில் விடப்படுவதால் மீண்டும் அது கழிவுநீராகத் தான் போகிறது. எனவே யாருக்கும் பயன்படாமல் உள்ள சுத்திகரித்த தண்ணீரை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story